Wednesday 18 July 2012

ஆடைகள்


ஆடைகள்
(
தொடர் 1) (ஜூன் 2007)

அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்தையும் வசப்படுத்திக் கொடுத்திருக்கின்றான். இன்னும் அவர்களுக்கு உணவுகளையும், குடிபானங்களையும், ஆடைகளையும் வசப்படுத்திக் கொடுத்திருக்கின்றான். எனினும் அதில் சில வரையறைகளை ஏறபடுத்தி இருக்கிறான். அந்த வரையறைகளைப் பேணி நடந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: "தனது அடியார்களுக்காக அல்லாஹ் வழங்கிய அலங்காரத்தையும், தூய்மையான உணவுகளையும் தடை செய்பவன் யார்?'' என்று (முஹம்மதே!) கேட்பீராக! "அவை இவ்வுலக வாழ்க்கையிலும் குறிப்பாக கியாமத் நாளிலும் நம்பிக்கை கொண்ட மக்களுக்குரியது'' எனக் கூறுவீராக! அறிகின்ற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளை விளக்குகிறோம்          
அல்குர்ஆன் 7:33
தான் படைத்தவற்றிலிருந்து அல்லாஹ் உங்களுக்கு நிழல்களை ஏற்படுத்தினான். மலைகளில் உங்களுக்காகக் குகைகளையும் ஏற்படுத்தினான். வெப்பத்திலிருந்து உங்களைக் காக்கும் சட்டைகளையும், போரில் உங்களைக் காக்கும் கவச உடைகளையும் அவன் ஏற்படுத்தினான். நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதற்காக இவ்வாறே அவன் தனது அருட்கொடையை முழுமைப்படுத்தினான்.
அல்குர்ஆன் 16:81

ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள ஆடைகளின் நிறங்கள்

மஞ்சள்:

உபைது பின் ஜுரைஜ் என்பவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் வந்து, "அப்துர் ரஹ்மானின் தந்தையே! உங்கள் தோழர்களில் எவரும் செய்யாத நான்கு விஷயங்களை நீங்கள் செய்வதை நான் பார்க்கிறேன்'' என்று கூறி விட்டு, "நீங்கள் ஆடையில் மஞ்சள் நிறத்தால் சாயம் பூசுவதை நான் பார்க்கிறேன்'' என்று கூறினார்.
அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் ஆடையில் மஞ்சள் சாயம் பூசுவதை நான் பார்த்தேன். எனவே அதைக் கொண்டு சாயம் பூசுவதை நான் விரும்புகிறேன்'' என்று பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி 166, 5851
இந்தச் செய்திலிருந்து மஞ்சள் நிற ஆடையை அணிந்து கொள்ளலாம் என்பதை நாம் விளங்க முடிகிறது.

சிவப்பு:

பராவு பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நடுத்தர உயரமுள்ளவர்களாகவும், இரு புஜங்களுக்கு இடையே அதிக இடைவெளி உள்ள (அகண்ட மார்புடைய)வர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் தலைமுடி அவர்களுடைய காதுகளின் சோனையை எட்டும் அளவிற்கு இருந்தது. அவர்களை நான்    சிவப்பு நிற அங்கி ஒன்றில் பார்த்திருக்கின்றேன். அதை விட அழகான ஆடையை நான் பார்த்ததில்லை.
நூல் : புகாரி 3551
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் "ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிபவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?'' என்று கேட்டார். அதற்கு, "சட்டை, முழுக்கால் சட்டை, தொப்பி, குங்குமச் சாயம் பட்ட ஆடை, சிவப்புச் சாயமிடப்பட்ட ஆடை ஆகியவற்றை அணியக் கூடாது; யாருக்காவது செருப்பு கிடைக்காமல் இருந்தால் தோலினால் ஆன காலுறை அணிந்து கொள்ளலாம் அந்தக் காலுறை கரண்டைக்குக் கீழே இருக்கும் வகையில் மேல் பாகத்தை வெட்டி விட வேண்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 366
இந்தச் செய்தியில் இஹ்ராம் அல்லாத மற்ற சமயத்தில் சிவப்பு நிற ஆடை அணிந்து கொள்ளலாம் என்று விளங்க முடிகின்றது. குங்கும நிற ஆடைக்கும் இது பொருந்தும் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஹஜ் அல்லாத மற்ற காலங்களிலும் காவி ஆடை அணியக் கூடாது என்று தனியாகத் தடை வந்துள்ளது.
இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறியதாவது சிவப்பு நிற ஆடை அணிவதையும் தங்கம் மோதிரம் அணிவதையும் ருகூவில் குர்ஆன் ஓதுவதை விட்டும் நான் தடுக்கப்பட்டேன்.
நூல்: நஸயீ 5171
இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து சில அறிஞர்கள், "முதலாவது செய்தியில் சிவப்பு நிறம் அனுமதிக்கப் பட்டதாக வருகிறது; இரண்டாவது செய்தியில் தடுக்கப்பட்டதாக வருகிறது; எனவே ஆடைகளில் குறைவாக சிவப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்; முற்றிலும் சிவப்பாக இருக்கக் கூடாது'' என்று கூறுகின்றனர்.
ஆனால் இந்த விளக்கம் ஏற்கத்தக்கதல்ல! ஏனெனில் நஸயீயின் இந்த அறிவிப்பில் மட்டுமே சிவப்பு என்று வருகிறது. இதே இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக, இதே வார்த்தையில் நஸயீயில் வேறு சில அறிவிப்புக்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. அந்த அறிவிப்புக்கள் அனைத்திலும் காவி நிறம் என்று வந்துள்ளது.
எனவே இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்களில் யாரோ ஒருவர் காவி நிறம் என்பதற்கு சிவப்பு என்று சொல்லி விட்டனர். ஏனென்றால் நிறத்தால் இரண்டும் ஒத்ததாக இருப்பதால் இப்படி மாற்றிக் கூறியிருக்கலாம் என்று விளங்கிக் கொண்டால் எந்த முரண்பாடும் இல்லை

பச்சை:

அபீ ரிம்ஸா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்கள் இரண்டு பச்சை நிற ஆடைகளை அணிந்து வந்தார்கள்.
நூல்: நஸயீ 5224
கருப்பு:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் தலையில் கருப்புத் தலைப்பாகை அணிந்த நிலையில் நுழைந்தார்கள்.
நூல்: முஸ்லிம் 2638
அப்தில்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்கள் மீது கருப்பு நிறமான கோடு போடப்பட்ட பட்டு இருந்த நிலையில் மழை வேண்டினார்கள்.
நூல்: நஸயீ 1490

வெள்ளை:

நபி (ஸல்) அவர்கள், "வெள்ளை நிறமான ஆடைகளை அணியுங்கள்; அது தான் ஆடைகளில் சிறந்ததாகும்; அதன் மூலம் உங்களில் மரனித்தவர்களுக்குக் கபன் செய்யுங்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: திர்மிதீ 915
நஸயீயின் மற்றொரு அறிவிப்பில்.....
நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் வெண்மை நிறமான ஆடையை அணியுங்கள்; அது தான் தூய்மையானதும் சிறந்ததுமாகும். அதன் மூலம் உங்களில் மரணித்தவர்களுக்குக் கபன் செய்யுங்கள்'' என்று கூறினார்கள்.
நூல்: நஸயீ 5227
மேற்கூறப்பட்ட நிறங்களில் அமைந்த ஆடைகளையும், இங்கு கூறப்படாத மற்ற நிறங்களிலான ஆடைகளையும் அணியலாம்; எந்தத் தடையும் இல்லை. ஆனால் தடை செய்யப்பட்ட காவி நிறத்தை மட்டும் அணியக் கூடாது.

தடை செய்யப்பட்ட நிறம்

நான் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட இரு ஆடைகளை அணிந்திருப்பதை அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கண்ட போது, "இவை இறை மறுப்பாளர்களின் ஆடைகளில் உள்ளதாகும்; எனவே இதை அணியாதீர்'' என்று சொன்னார்கள்.
நூல்: முஸ்லிம் 4218
"அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள், ஆண்கள் குங்குமப்பூ சாயமிட்டுக் கொள்ளக் கூடாது எனத் தடை விதித்தார்கள்'' என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நூற்கள்: புகாரி 5846, முஸ்லிம் 4268
மேலே சொன்ன முதலாவது செய்தியில் பொதுவாகக் காவி ஆடை அணியக் கூடாது என்று வந்திருக்கிறது. இரண்டாவது செய்தியில் ஆண்களுக்குத் தடை விதித்தார்கள் என்று வருகிறது. எனவே ஆண்கள் தான் காவி ஆடை அணியக் கூடாது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இதைப் பின்வரும் செய்தி மேலும் வலுவூட்டுகிறது.
அம்ரு பின் ஷுஐப் தன் பாட்டனார் மூலம் அறிவிக்கிறார்:
நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு உயரமான இடத்திலிருந்து இறங்கினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் மீது மிருதுவான ஆடையில் கடுமையாக குங்குமப்பூ சாயமிடப்பட்டிருப்பதைக் கண்டு, "இது என்ன? மிருதுவான ஆடையில் இவ்வளவு காவி நிறத்தால் சாயமிடப்பட்டு இருக்கிறதே?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் வெறுப்பதை நான் அறிந்து என்னுடைய வீட்டிற்கு வந்தேன். அங்கு அடுப்பு மூட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த அடுப்பில் தூக்கி எறிந்து விட்டு மறுநாள் காலையில் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அந்த சாயமிடப்பட்ட ஆடையை என்ன செய்தாய்?'' என்று கேட்டார்கள். நான் விஷயத்தைக் கூறினேன் அதற்கு நபியவர்கள், "அதை உன் குடும்பத்தாருக்கு அணிவிக்கக் கொடுத்திருக்க கூடாதா? பெண்கள் அணிவது தவறில்லையே'' என்றார்கள்.
நூல்: அபூதாவூத் 3544
இந்தச் செய்தியிலிருந்து பெண்கள் காவி நிற ஆடையை அணிவது தவறில்லை என்பது தெரிகின்றது. இன்ன நிறங்கள் அணியலாம்; இன்ன நிறங்கள் அணியக் கூடாது என்பது ஆண்களுக்கு மட்டும் தான். பெண்களுக்கு இல்லை. பட்டாடை மற்றும் மற்ற ஆடைகளில் பெண்களுக்கு அனுமதி வழங்கப் பட்டிருப்பது போன்று இதிலும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
முஸ்லிமில் வரக்கூடிய ஒரு செய்தி நமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தலாம். அந்தச் செய்தியில்...
நபி (ஸல்) அவர்கள் என் மீது இரண்டு காவி ஆடைகளைக் கண்டார்கள். அப்போது கோபமாக "உன்னுடைய தாயாரா (இதை அணியுமாறு) ஏவினார்கள்?'' என்று கேட்டார்கள். நான், "இதைத் துவைத்து நிறத்தை மாற்றி விடட்டுமா?'' என்று கேட்டேன். நபியவர்கள், "இல்லை! இதை எரித்து விடு'' என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 3873
இதற்கு இமாம் நவவீ அவர்கள் இவ்வாறு விளக்கம் கூறுகின்றார்கள்: "இதை உன் தாய் தான் ஏவினார்களா?'' என்ற நபியவர்களின் சொல், "இந்த ஆடை பெண்களுக்குரியதும் அவர்களுடைய அலங்காரமாகவும் இருக்கும் போது அதை எப்படி உனக்கு அணியக் கொடுத்தார்கள்?' என்பது இதன் கருத்தாகும். இதை எரிக்க வேண்டும் என்ற நபியவர்களின் கட்டளை, தண்டனைக்குரியது; கடுமையானது என்பதைக் காட்டுவதற்காகவும் மற்றவர்கள் இதைச் செய்வதை விட்டும் தடுப்பதற்காகவும் தான்.
நூல்: ஷரஹ் முஸ்லிம்

ஆடை அணிவதன் ஒழுக்கங்கள்

ஆடை அணிவதில் இஸ்லாம் சில ஒழுங்கு முறைகளைக் கற்றுத் தந்திருக்கின்றது. அவற்றை இப்போது பார்ப்போம்.

1. மர்ம உறுப்பை மறைக்கும் படி ஆடை அணியவேண்டும்

"எங்கள் மறை உறுப்புகளில் எதை மறைக்க வேண்டும்; எவற்றை மறைக்காமல் இருக்கலாம்'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உன் மனைவி, உன் அடிமைப் பெண்களிடம் தவிர மற்றவர்களிடம் உன் மறை உறுப்புகளை பாதுகாத்துக் கொள்'' என்று விடையளித்தார்கள். "ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் இருக்கும் போது மறை உறுப்பைக் காத்து கொள்ள வேண்டுமா?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வெட்கப்படுவதற்கு அல்லாஹ் மிகத் தகுதியானவன்'' என்று விடையளித்தார்கள். இதை முஆவியா பின் ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: திர்மிதி 2693, 3718

2. ஒரு ஆடையில் இருவர் படுக்கக் கூடாது

ஒரு ஆண் மற்றொரு ஆணுடைய மறை உறுப்பைப் பார்க்க வேண்டாம்; ஒரு பெண் மற்றொரு பெண்ணுடைய மறை உறுப்பைப் பார்க்க வேண்டாம். ஒரு ஆண், மற்றொரு ஆணுடன் ஒரே ஆடைக்குள் படுக்க வேண்டாம்; ஒரு பெண் மற்றொரு பெண்ணோடு ஒரே ஆடைக்குள் படுக்க வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: திர்மிதி 2717, அபூதாவூத் 3502

3. வலது புறமாக ஆரம்பம் செய்ய வேண்டும்

நபி (ஸல்) அவர்கள் சட்டை அணிந்தால் வலது புறத்திலிருந்தே ஆரம்பம் செய்வார்கள்.
நூல்: திர்மிதி 1688
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஆடை அணியும் போதும் உளூச் செய்யும் போதும் வலது புறத்திலிருந்தே ஆரம்பம் செய்யுங்கள்.
நூல்: அபூதாவூத் 3612

5. பெருமைக்காக ஆடையை தரையில் படுமாறு நடக்கக் கூடாது

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: கணுக் கால்களுக்குக் கீழே தொங்கும் (வகையில்) கீழங்கி(யை அணிகிறவர்) நரகில் புகுவார்.
நூல்: புகாரி 5787
அபூதர் (ரலி) கூறியதாவது: "மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை தான் உண்டு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான், "அவர்கள் இழப்புக்குள்ளாகி விட்டனர்; நஷ்டமடைந்து விட்டனர். அவர்கள் யார்? அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்டேன். அதற்கு, "தமது ஆடையை கணுக் கால்களுக்குக் கீழ் இறக்கிக் கட்டியவர், செய்த உபகாரத்தைச் சொல்லி காட்டுபவர், பொய் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர்''  என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
நூல்: முஸ்லிம் 171
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முற்காலத்தில் ஒரு மனிதன் தன் கீழங்கியை தற்பெருமையின் காரணத்தால் இழுத்துக் கொண்டே நடந்த போது அவன் புதைந்து போகும் படி செய்யப்பட்டான். அவன் மறுமை நாள் வரை பூமிக்குள் அழுந்திச் சென்று கொண்டே இருப்பான்.
நூல்: புகாரி 3485
இது போன்ற செய்திகளை முன் வைத்து கரண்டைக் கால்களுக்குக் கீழ் ஆடை அணியக் கூடாது; அப்படி அணிகிறவர் நரகில் புகுவார் என்று கூறுகின்றனர். இப்படி மட்டும் செய்தி இருந்தால் இவர்கள் சொன்ன கருத்து சரி என்று சொல்லலாம். ஆனால் இது போன்ற மற்ற செய்திகளைப் பார்க்கும் போதுபொத்தாம் பொதுவாக இப்படிச் செய்கிறவர் நரகில் புகுவார் என்று சொல்லவில்லை. மாறாக பெருமைக்காக இப்படி அணிந்தால் நரகம் என்று நபியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதற்குப் பின்வரும் செய்திகள் ஆதாரமாக இருக்கின்றன.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனது ஆடையைத் தரையில் (படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக் கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.
நூல்: புகாரி 5783
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கர்வத்தோடு தனது கீழாடையைத் தரையில் (படுமாறு) இழுத்துச் சென்றவனை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.
நூல்: புகாரி 5788
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: "யார் தனது ஆடையைப் பெருமையுடன் தரையில் படுமாறு இழுத்துக் கொண்டு செல்கிறாரோ அவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் கவனமாக இல்லா விட்டால் எனது கீழங்கியின் இரு பக்கங்களில் ஒன்று சரிந்து விடுகிறது'' என்று சொன்னார்கள் அதற்கு நபி (ஸல்) அவர்கள்,  "நீங்கள் தற்பெருமையுடன் அப்படி செய்பவரல்லர்'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 5784
மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் தற்பெருமையுடன் கர்வத்துடன் கணுக் கால்களுக்குக் கீழ் அணிந்தால் தான் நரகம் என்று வருகிறது. இதுதான் சரியாகவும் இருக்கிறது. ஏனென்றால் சாதாரணமாக ஆடை தரையில் படுவதற்காக இந்தத் தண்டனை கொடுப்பது சரியில்லை. மாறாக பெருமையுடன் நடந்ததால் தான் இந்தத் தண்டனை கொடுப்பது தான் சரியாகும்.
சில அறிஞர்கள் வேறு விதமான விளக்கத்தைக் கொடுக்கின்றனர். அதாவது கரண்டைக்குக் கீழ் ஆடை இறங்கி விட்டால் அது நரகத்திற்குரியது என்பதும், பெருமைக்காக ஆடை அணிந்து தரையில் படுமாறு சென்றால் அவர்களை அல்லாஹ் பார்க்கவும் மாட்டான் என்பதும் தனித்தனியான செய்திகள். எனவே இரண்டு ஹதீஸ்களையும் இணைத்து பெருமைக்காகச் சென்றால் தான் இந்த எச்சரிக்கை என்று விளங்கக் கூடாது. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான எச்சரிக்கைகள் இருக்கின்றனஎனவே பெருமைக்காக இருந்தாலும் பெருமை இல்லாவிட்டாலும் கணுக் கால்களுக்குக் கீழ் ஆடை அணியக் கூடாது என்று கூறுகின்றனர்.
ஆனால் இந்த விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் பொதுவாக ஹதீஸ் கலையின் விதியில், ஒரு செய்தி காரணம் இல்லாமலும் இன்னொரு செய்தி காரணத்தைக் குறிப்பிட்டும் வந்தால் காரணத்தோடு வந்திருக்கும் செய்தியைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உள்ளது. இந்த விதியை அறியாத காரணத்தால் இப்படி விளக்கம் கூறி விடுகின்றனர்.
இந்த விதியை விளங்குவதற்காக, குர்ஆனில் சொல்லப்பட்ட ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். குர்ஆனில் அல் மாயிதா என்ற அத்தியாயத்தில் ஹராமாக்கப்பட்ட விஷயங்களைச் சொல்லும் போது இரத்தத்தையும் குறிப்பிடுகின்றான்.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக் கொண்டவை, மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப் பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.
அல் குர்ஆன் 5:3
இதே செய்தியை திருக்குர்ஆனில் அன்ஆம் என்ற அத்தியாயத்தில் இரத்தத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது ஓட்டப்பட்ட இரத்தம் என்று குறிப்பிடுகிறான்
"தாமாகச் செத்தது, ஓட்டப்பட்ட இரத்தம், அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி, மற்றும் அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்ட பாவமான(உண)வை தவிர வேறு எதுவும் மனிதர்கள் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! யாரேனும் வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்பட்டால் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 6:145)
இங்கே நாம் எப்படி விளங்கிக் கொள்வோம்? ஓடக் கூடிய இரத்தம் தான் ஹராம்! ஓடாத இரத்தங்கள் ஹராம் இல்லை என்று விளங்குவோம். இதே போன்று தான் கணுக் கால்களுக்குக் கீழே ஆடை அணியக் கூடாது என்று வந்திருக்கக் கூடிய செய்தி பொதுவாக இடம் பெற்றுள்ளது. மற்றொரு செய்தியில் பெருமைக்காக என்று வந்துள்ளது. எனவே காரணத்தோடு வந்திருக்கக் கூடிய  செய்தியைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படித் தான் இந்த விஷயத்தில் இணைத்து முடிவு காண வேண்டும் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் பத்ஹுல் பாரியிலும், இமாம் நவவீ அவர்கள் முஸ்லிம் விளக்கவுரையிலும் கூறியிருக்கிறார்கள்.
இன்னொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிடுவது அவசியமாகும். ஆடையை பெருமைக்காக அணிவது குற்றம் என்றவுடன் இது வேட்டியை, கீழங்கியை மட்டும் குறிக்கும், மற்ற ஆடைக்குப் பொருந்தாது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. மாறாக சட்டை, தலைப்பாகை இவைகளுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும்.
"ஆடையைத் தொங்க விடுவது என்பது கீழங்கியிலும், சட்டையிலும், தலைப்பாகையிலும் இருக்கிறது. யார் இவைகளைப் பெருமைக்காக இழுத்துச் செல்கிறாரோ அவரை கியாம நாளில் அல்லாஹ் பார்க்க மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அபூதாவூத் (3571)
இந்தச் செய்தி கீழங்கியை அணிபவருக்கு மட்டும் எச்சரிக்கை செய்யவில்லை. மாறாக தலைப் பாகையின் ஓரங்களைப் பெரிதாகத் தொங்க விடுவதையும், சட்டையில் ஜுப்பா என்ற பெயரில் முட்டுக் கால் வரை தொங்க விடுவதையும் எச்சரிக்கை செய்கிறது. சம்பந்தப் பட்டவர்கள் திருந்திக் கொள்ள வேண்டும்.
(குறிப்பு: இந்த ஹதீஸில் இடம் பெரும் அப்துல் அஜீஸ் என்பவரைப் பலர் குறை கூறியிருப்பதாக இமாம் முன்திரி அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இவருடைய விஷயத்தில் குறை கூறியவர்கள் இவர் கொண்டிருந்த கொள்கைக்காகத் தான் குறை கூறியுள்ளார்கள். கொள்கை ரீதியாக ஒருவரைக் குறை கூறுவதால் அவரது நம்பகத்தன்மையில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.) 

5. எதுவரை உயர்த்தி கட்டலாம்

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது எனது கீழாடை கணுக்காலுக்குக் கீழ் இருந்தது. அப்போது அவர்கள், "அப்துல்லாஹ்! உனது கீழாடையை உயர்த்திக் கட்டு!'' என்றார்கள். நான் உயர்த்திக் கட்டினேன். "இன்னும் உயர்த்திக் கட்டு'' என்றார்கள். அவ்வாறே நான் இன்னும் உயர்த்தினேன். பின்னர் நான் அதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். (இவ்வாறு அப்துல்லாஹ் பின் உமர் கூறியதைக் கேட்ட) மக்கள் சிலர், "எதுவரை உயர்த்த வேண்டும்?'' என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "கணுக்கால்களின் பாதியளவுக்கு'' என்று பதிலளித்தார்கள்.
நூல்: முஸ்லிம் 4238
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஃமினின் கீழங்கி கணுக்காலின் பாதியளவாகும். கணுக்காலுக்கும் கரண்டைக்கும் மத்தியில் இருந்தால் குற்றமில்லைகரண்டைக்கும் கீழாக இருந்தால் அது நரகத்திற்கு உரியதாகும். யார் பெருமையோடு ஆடையை இழுத்துச் செல்கிறாரோ அல்லாஹ் அவரை கியாம நாளில் பார்க்க மாட்டான்.
நூல்: அபூதாவூத் 3570
மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் அனைத்திலும் பொதுவாக ஆடைகளை கரண்டைக்குக் கீழ் அணியக் கூடாது என்று வந்திருக்கிறது. எனினும் பெண்களுக்கு என்று இதில் விதி விலக்கு இருக்கிறது. அதைக் கீழ்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

6. பெண்கள் கரண்டைக்குக் கீழ் அணியலாமா?

நபி (ஸல்) அவர்கள், "யார் தமது கீழாடையைப் பெருமைக்காகத் தரையில் படுமாறு இழுத்துச் செல்கிறாரோ அவரைக் கியாம நாளில் அல்லாஹ் பார்க்க மாட்டான்'' என்று கூறியவுடன் உம்மு ஸலமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! பெண்கள் தங்களுடைய கீழாடையை எப்படி அணிவது?'' என்று கேட்டார்கள். "ஒரு ஜான் இறக்கிக் கொள்ளட்டும்'' என்றார்கள். "அப்படியானால் அவர்களின் பாதங்கள் வெளிப்படுமே!'' என்று உம்மு ஸலமா (ரலி) கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அப்படியானால் ஒரு முழம் இறக்கிக் கொள்ளலாம்; அதை விட அதிகமாக்கக் கூடாது'' என்றார்கள்.
நூல்கள்: அபூதாவூத் 5241, திர்மிதி 1651
பெண்கள் கரண்டைக்குக் கீழ் ஆடை அணிவதை இந்தச் செய்தி அனுமதிக்கிறது. எனவே அவர்களுக்கு மேற்கூறப்பட்ட எச்சரிக்கை பொருந்தாது என்பதை விளங்கலாம்.

7. அழகான, தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும்

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், "ஒரு மனிதர் தன்னுடைய ஆடையும், காலணியும் அழகாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். இது பெருமையா?'' எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் "அல்லாஹ் அழகானவன்; அவன் அழகை விரும்புகிறான்'' என்று கூறினார்கள்
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: முஸ்லிம் 131
ஒரு மனிதர் அழுக்கான ஆடை அணிந்தவராக நிற்பதை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அப்போது "இவர் தனது ஆடையை தூய்மைப் படுத்தக் கூடிய ஒரு பொருளை பெற்றுக் கொள்ளவில்லையா?'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி
நூல்: அபூதாவூத் 3540
வளரும் இன்ஷா அல்லாஹ்

ஆடைகள் தொடர்  : 2

அனுமதிக்கப்பட்ட ஆடைகளும் தடுக்கப்பட்ட ஆடைகளும்

(லை 2007)
முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் தமது இயற்கைத் தேவையை நிறைவேற்றச் சென்று விட்டுத் திரும்பி வந்தார்கள். நான் தண்ணீருடன் அவர்களை எதிர் கொண்டேன். பிறகு உளூச் செய்தார்கள். அப்போது அவர்கள் ஷாம் நாட்டு ஜுப்பா அணிந்திருந்தார்கள். அப்போது அவர்கள் வாய் கொப்பளித்து, நாசிக்குத் தண்ணீர் செலுத்தி விட்டுத் தமது முகத்தைக் கழுவினார்கள். பின்னர் தமது இரு கைகளையும் சட்டைக் கையிலிருந்து வெளியே எடுக்கப் போனார்கள். ஆனால் சட்டைக் கைகள் குறுகலாக இருந்தன. ஆகவே தமது இரு கைகளையும் அவர்கள் ஜுப்பாவின் கீழிருந்து வெளியே எடுத்து அவற்றைக் கழுவினார்கள். மேலும் தலையையும், காலுறையையும் மஸஹ் செய்தார்கள்.
நூல்: புகாரி (5798)
முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு பயணத்தில் ஓரிரவு நபி (ஸல்) அவர்களோடு இருந்தேன். அப்போது அவர்கள், "உம்மிடம் தண்ணீர் இருக்கிறதா?'' என்று கேட்டார்கள். நான், "ஆம், இருக்கிறது'' என்று பதிலளித்தேன். உடனே அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி இரவின் இருளில் என் பார்வையிலிருந்து மறையும் அளவு நடந்தார்கள். பிறகு வந்தார்கள். நான் குவளை நீரை அவர்கள் மீது ஊற்றினேன். அவர்கள் தமது முகத்தையும் இரு கைகளையும் கழுவினார்கள். அப்போது கம்பளி ஜுப்பா  அணிந்திருந்தார்கள். இதனால் ஜுப்பாவிலிருந்து தமது முழங்கைகளை எடுக்க முடியவில்லை. ஆகவே அங்கியின் கீழிலிருந்து எடுத்துக் கழுவினார்கள். பிறகு தமது தலையை மஸஹ் செய்தார்கள். பிறகு நான் அவர்களின் காலுறைகள் இரண்டையும் கழற்ற முனைந்தேன். அதற்கு அவர்கள், "அவற்றை விட்டு விடுவீராக! ஏனெனில் நான் கால்கள் இரண்டையும் தூய்மையான நிலையிலேயே நுழைத்திருந்தேன்'' என்று சொல்லி அவற்றைத் தடவி மஸஹ் செய்து கொண்டார்கள்.
நூல்: புகாரி (5799)

சால்வை ஆடை

"நபி (ஸல்) அவர்களிடம் புர்தா ஒன்றை ஒரு பெண்மணி கொண்டு வந்தார்'' என்று ஸஹ்ல் கூறி விட்டு, "புர்தா என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார். அங்கிருந்தோர், "ஆம், புர்தா என்பது சால்வை தானே'' என்றனர். ஸஹ்ல் ஆம் என்று கூறிவிட்டு, "மேலும் அப்பெண்மணி, "நான் எனது கையாலேயே இதை நெய்திருக்கிறேன்; இதனை உங்களுக்கு அணிவிக்கவே கொண்டு வந்தேன்' என்றதும், அது தேவையாக இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டார்கள். பிறகு அவர்கள் அதைக் கீழாடையாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்த போது ஒருவர், "இது எவ்வளவு அழகாக இருக்கிறது. இதை எனக்கு அணிவித்து விடுங்கள்'' என்று கேட்டார். அங்கிருந்தோர், "நீர் செய்தது சரியா? நபி (ஸல்) அவர்களுக்குத் தேவைப்பட்டதால் தான் அதை அணிந்திருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கேட்பவர்களுக்குக் கொடுக்காமல் இருக்க மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டே நீர் அவர்களிடம் அதைக் கேட்டு விட்டீரே'' எனக் கூறினார்கள் அதற்கவர், "அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அதை அணிந்து கொள்வதற்காகக் கேட்கவில்லை. அது எனக்கு (இறந்த பின் போர்த்தும்) கஃபனாக ஆகி விட வேண்டும் என்றே கேட்டேன்'' என்றார். பின்பு அது அவருக்குக் கஃபனாக ஆகி விட்டது'' என்று ஸஹ்ல் கூறினார்.
நூல்: புகாரி 1277

சட்டை, பேண்ட்

இப்னு உமர் (ரலி) கூறியதாவது: "அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் அணிந்திருக்கும் போது எந்த ஆடைகளை நாங்கள் அணியலாம் என்று நீங்கள் கட்டளை இடுகிறீர்கள்?'' என்று ஒரு மனிதர் எழுந்து கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் "நீங்கள் சட்டைகளையும், கால் சட்டைகளையும், தலைப் பாகையையும், தொப்பிகளையும் அணியாதீர்கள். ஒருவரிடம் செருப்புகள் இல்லை என்றால் அவர் காலுறைகளை கரண்டைக்குக் கீழ் உள்ள பகுதி வரை கத்தரித்துக் கொள்ளட்டும். குங்குமப்பூ சாயம், வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்ந்த எதனையும் அணியாதீர்கள். இஹ்ராம் அணிந்த பெண் முகத் திரையையும், கையுறைகளையும் அணியக் கூடாது'' என்று பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி 1838
இந்த ஹதீஸிலிருந்து ஹஜ் காலம் அல்லாத மற்ற காலங்களில் சட்டை மற்றும் கால் சட்டைகள் அணிந்து கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ள முடிகிறது. ஹஜ் உடைய காலங்களில் சட்டை அணியக் கூடாது என்பதற்குக் காரணம் அது தைக்கப்பட்ட ஆடையாக இருப்பதால் தான். தைக்கப்பட்ட ஆடைகளை ஹஜ் காலங்களில் அணியக் கூடாது.

வேலைப்பாடு செய்யப்பட்ட ஆடை

நபி (ஸல்) அவர்களிடம் சில ஆடைகள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் சிறிய கறுப்பு நிற கம்பளியாடை ஒன்றும் இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "இதை யாருக்கு அணிவிக்கப் போகிறோம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். மக்கள் பதில் கூறாமல் மௌனமாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், "உம்மு காலிதை என்னிடம் கொண்டு வாருங்கள்'' என்று சொல்ல அவ்வாறே (சிறுமியாக இருந்த) நான் தூக்கிக் கொண்டு வரப்பட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தால் அந்த ஆடையை எடுத்து எனக்கு அணிவித்தார்கள். மேலும் இந்த ஆடையை நீ (பழையதாக்கி) கிழித்து நைந்து போகச் செய்து விடு'' என்று கூறிவிட்டு, "உம்மு காலிதே! இது ஸனாஹ் (அழகாக) இருக்கிறது'' என்று சொன்னார்கள். அந்த ஆடையில் பச்சை நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
நூல்: புகாரி 5823
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க சதுரமான கருப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்து கொண்டு தொழுதார்கள். பிறகு அதன் வேலைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்தார்கள். (தொழுது முடித்து) ஸலாம் கொடுத்தவுடன், "எனது இந்தக் கருப்புக் கம்பளி ஆடையை (எனக்கு அன்பளிப்பு அளித்த) அபூஜஹ்மிடம் கொண்டு செல்லுங்கள். ஏனெனில் சற்று முன்பு அது தொழுகையிலிருந்து எனது கவனத்தைத் திருப்பி விட்டது. அபூஜஹ்மின் மற்றொரு (சாதாரண) ஆடையை என்னிடம் கொண்டு வாருங்கள்'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 5817
இந்த ஹதீஸிலிருந்து இது போன்ற தொழுகையின் கவனத்தை திருப்பக் கூடிய ஆடைகளை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், இந்த ஆடைகளைத்  தொழுகை அல்லாத மற்ற நேரங்களில் பயன்படுத்தலாம் என்றும் அறிய முடிகின்றது.

அரைக்கை சட்டை

அரைக்கை சட்டை அணிந்து தொழுதால் மக்ரூஹ் என்று சில உலமாக்கள் கூறி வருவதைப் பார்க்கிறோம். இதற்குக் குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்த ஆதாரமும் இல்லை. ஹதீஸை சரியாகப் படிக்காத அல்லது விளங்காத உலமாக்கள் தான் இப்படிச் சொல்லி வருகிறார்கள். ஆனால் ஹதீஸ்களை ஆராய்ந்து பார்த்தால் இவர்கள் கூறுவது உண்மைக்கு மாற்றமானது என்பதை விளங்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் (ஸுஜூது செய்யும் போது) தமது இரு அக்குளின் வெண்மை தெரியும் அளவுக்கு இரு கைகளையும் விரித்து வைப்பார்கள்.
நூல்: புகாரி 390, 807, 3564
இந்த ஹதீஸில் அக்குள் தெரியும் அளவிற்கு நபி (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள் என்பதிலிருந்து இது ஹராமோ, மக்ரூஹோ அல்ல என்பதை அறியலாம். எனவே அக்குள் தெரியும் அளவுக்கு ஆடை அணியலாம். ஆனால் தொழும் நிலையில் தோளில் துண்டு இல்லாமல் தொழக் கூடாது என்பதைப் பின் வரும் ஹதீஸ் விளக்குகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாரும் தமது தோள்களில் எதுவும் இல்லாதிருக்க ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழ வேண்டாம்.
நூல்: புகாரி 359

அரைக்கால் டவுசர்

நபி (ஸல்) அவர்களிடம் ஒரே ஆடையை அணிந்து தொழுவது பற்றி ஒருவர் வினவினார். அப்போது, "உங்களில் எல்லோரும் இரு ஆடைகளை வைத்திருக்கிறார்களா?'' என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். (உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்) பின்னர் ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் இது விஷயமாக வினவினார். அதற்கு, "உங்களுக்கு விசாலமாக்கியிருந்தால் நீங்களும் விசாலமாக்கிக் கொள்ளுங்கள்'' என உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். சிலர் எல்லா ஆடைகளும் அணிந்து தொழுதனர். வேறு சிலர் ஒரு வேஷ்டியும் ஒரு மேலாடையும் அணிந்து தொழுதனர். வேறு சிலர் ஒரு வேஷ்டியும் ஒரு சட்டையும் அணிந்து தொழுதனர். இன்னும் சிலர் ஒரு வேஷ்டியும் ஒரு மேலங்கியும் அணிந்து தொழுதனர். வேறு சிலர் முழுக்கால் சட்டை மேல் போர்வை அணிந்து தொழுதனர். வேறு சிலர் முழுக்கால் சட்டையும் மேல் சட்டையும் அணிந்து தொழுதனர். முழுக்கால் சட்டையும் மேலங்கியும் அணிந்து சிலர் தொழுதனர். சிலர் அரைக்கால் சட்டையும் மேலங்கியும் அணிந்து தொழுதனர். இவ்வாறு பல விதமாகத் தொழலானார்கள்.
நூல்: புகாரி 355
இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள துப்பான் என்ற அரபி வார்த்தைக்கு அரைக்கால் டவுசர் என்று தான் பொருள். இதைப் பற்றி விரிவாக ஏகத்துவத்தில் முந்தைய இதழ்களில் விளக்கப்பட்டுள்ளது.

உயர் ரகமான ஆடை

சிலர் உயர் ரகமான ஆடை அணிவதை, பகட்டுக்குரியது; அவ்வாறு அணிவது கூடாது என்பது போல் பேசி வருகின்றனர். ஆனால் இது நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்கு மாற்றமானது ஆகும்.
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் "ஒரு மனிதர் தன்னுடைய ஆடையும், காலணியும் அழகாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். இது பெருமையா?'' எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் "அல்லாஹ் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான்'' என்று கூறினார்கள்
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: முஸ்லிம் 131
"அல்லாஹ்வின் தூதரே! நான் இன்ன மனிதரிடம் சென்றேன். அவர் எனக்கு விருந்து தரவில்லை. அவர் என்னிடம் வரும் போது அவரைப் போல் நானும் நடந்து கொள்ளலாமா?'' என்று நபி ஸல் அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், கூடாது என்று சொல்லி விட்டு, நான் மட்டமான ஆடை அணிந்திருப்பதைப் பார்த்த நபியவர்கள், "உன்னிடம் வசதி இருக்கிறதா?'' எனக் கேட்டார்கள். ஆடு, ஒட்டகம் மற்றும் அனைத்து செல்வங்களையும் அல்லாஹ் எனக்குக் கொடுத்திருக்கிறான்'' என்று நான் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அந்தச் செல்வம் உம் மீது தென்படட்டும்'' என்றார்கள்.
நூல்: திர்மிதி 1929
வசதி படைத்தவர்கள் உயர் ரகமான ஆடைகளை அணிவது தவறில்லை என்பதுடன் அது விரும்பத்தக்கது என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்கள் நமக்கு அறிவிக்கின்றன.

பட்டாடை அணிதல்

"பட்டாடை அணிவதும்தங்கமும் என்னுடைய சமுதாயத்தில் ஆண்களுக்கு ஹராம் (தடை செய்யப்பட்டது) ஆகும். பெண் களுக்கு ஹலால் (அனுமதிக்கப் பட்டது) ஆகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)
நூல்: திர்மிதி 1642
"சாதாரண பட்டோ, அலங்காரப் பட்டோ அணியாதீர்கள். தங்கம் மற்றும் வெள்ளித் தட்டுகளில் சாப்பிடாதீர்கள். அவை இம்மையில் (காஃபிர்களாகிய) அவர்களுக்கும் மறுமையில் (இறை நம்பிக்கையாளர் களான) நமக்கும் உரியதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா (ரலி)
நூல்: புகாரி 5426
பட்டாடையின் மீது அமர்வதை நபியவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபதுல்யமான்(ரலி)
நூல்: புகாரி 5837
நபி (ஸல்) அவர்கள் "இம்மையில் (ஆண்கள்) பட்டு அணிந்தால் மறுமையில் அதிலிருந்து சிறிதளவும் அணியவே முடியாது'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி
நூல்: புகாரி 5830
இந்தச் செய்திகள் அனைத்தும் பட்டாடை அணிவது ஆண்களுக்கு ஹராம் என்று சொன்னாலும் பின்வரும் செய்திகள் சிறிதளவு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறுகின்றன.
நபி (ஸல்) அவர்கள் (ஆண்களுக்கு) பட்டு அணிவதைத் தடை செய்தார்கள்; இந்த அளவைத் தவிர! (என்று கூறி) பெரு விரலை அடுத்துள்ள (சுட்டு விரல், நடுவிரல் ஆகிய) இரு விரல்களால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: புகாரி 5828
இன்னும் சில நோய்களுக்காக பட்டாடைகளை அணிந்து கொள்ளலாம் என்றும் நபி ஸல் அவர்கள் நமக்கு அனுமதி வழங்கியிருக்கிறார்கள்.
"அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோருக்கு இருந்த சிரங்கு நோயின் காரணத்தினால் அவர்களுக்கு (மட்டும்) பட்டாடை அணிந்து கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.
அறிவிப்பாளர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 2919

No comments:

Post a Comment